பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்; அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்; அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:44 PM GMT (Updated: 17 Dec 2018 11:44 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனத்தை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் விழா சிவகங்கையில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி வரவேற்று பேசினார். அமைச்சர் பாஸ்கரன் மானிய விலையில் இரு சக்கரவாகனங்களை வழங்கி பேசியதாவது:– மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்.

அதில் உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டமும் ஒன்று. முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் தற்போது உள்ள அ.தி.மு.க. அரசு விடாமல் செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு 1,919 பெண்களுக்கு ரூ.4கோடியே 50லட்சம் மானியத்தில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டுஉள்ளது. மேலும் மகளிர் திட்ட அலுவலகம் மூலம் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.84 கோடி கடன் உதவி வழங்கப்பட உள்ளது. இதில் இதுவரை ரூ.36 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் இந்த திட்டங்களை நல்ல முறையில் பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தற்போது தமிழகத்தில் சிவகங்கையை தவிர மற்ற அனைத்து மாட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால் நமது மாவட்டத்தில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் உள்ளது. முக்கியமாக காளையார்கோவில் பகுதியில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகஅளவில் உள்ளது. அந்த பகுதியில் எங்கு ஆழ் குழாய் அமைத்தாலும் இதில் உப்புத் தண்ணீர் தான் கிடைக்கிறது. அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தண்ணீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை என்னிடம் நேரில் வந்து தெரிவிக்கலாம். அவைகளை தீர்த்து வைக்க நான் முயற்சி எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆனந்தன், என்.எம்.ராஜா, கண்ணப்பன் மற்றும் சசிக்குமார், வக்கீல் பாண்டி, கே.ஆர்.ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story