புதுக்கோட்டை அருகே ‘கஜா’ புயலுக்கு 200 ஆடுகளை பறிகொடுத்த விவசாயி சோகத்தில் சாவு


புதுக்கோட்டை அருகே ‘கஜா’ புயலுக்கு 200 ஆடுகளை பறிகொடுத்த விவசாயி சோகத்தில் சாவு
x
தினத்தந்தி 18 Dec 2018 11:00 PM GMT (Updated: 18 Dec 2018 8:25 PM GMT)

புதுக்கோட்டை அருகே ‘கஜா‘ புயலுக்கு 200 ஆடுகளை பறிகொடுத்த விவசாயி சோகத்தில் உயிரிழந்தார்.

கீரமங்கலம்,

கடந்த மாதம் தமிழகத்தை ‘கஜா‘ புயல் தாக்கியது. இதில், புதுக்கோட்டை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அப்போது கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (வயது 60) வளர்த்து வந்த 300 ஆடுகளில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகள் பல்வேறு இடங்களுக்கு அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. மீதமுள்ள ஆடுகளை அவர் தொடர்ந்து வளர்த்து வந்தார்.

ஆனால், புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆடுகள் தினமும் பலியாகிக்கொண்டே வந்தன. அந்த வகையில், இது வரை 200 ஆடுகளுக்கு மேல் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தனது பிள்ளைகளை போல வளர்த்து வந்த ஆடுகள் தொடர்ந்து இறந்து கொண்டே வந்ததால், ராஜேந்திரன் சோகத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆடுகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்த போது, அதில் சில ஆடுகள் இறந்து போயின. அந்த ஆடுகளை அருகில் குழி தோண்டி புதைத்து விட்டு, ஆட்டுப்பட்டிக்கு அருகில் படுத்து தூங்கினார்.

ஆனால், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்க வில்லை. அருகில் உள்ளவர்கள் அவரை எழுப்பிய போதும் எழுந்திருக்கவில்லை. அப்போது அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அவரது மகன் பாண்டியராஜன் விரைந்து வந்து தந்தையின் உயிரற்ற உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் ஆடுகள் வளர்த்து வருகிறோம். புயல் தாக்கிய அன்று, 200-க்கும் மேற்பட்ட ஆடுகள் பல்வேறு இடங்களுக்கு அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. கால்நடை மருத்துவர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் பயுல், மழைக்கு 126 ஆடுகள் இறந்ததாக கணக்கிட்டனர். அதன் பிறகும் சினை ஆடுகள் குட்டிகளை குறைந்த நாட்களில் போட்டது. அந்த குட்டிகளும், ஆடுகளும் அடுத்தடுத்து இறந்து போயின. அதேபோல ஒவ்வொரு நாளும் 5 ஆடுகளுக்கு குறையாமல் இறந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 8 ஆடுகள் இறந்தன. அந்த சோகத்தில் படுத்து தூங்கிய எனது தந்தை உயிரிழந்துள்ளார். அவர் இறந்த பிறகும் நேற்று 5 ஆடுகள் இறந்து விட்டன. இன்னும் 50 ஆடுகள் தான் மீதி இருக்கிறது.

கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும் தினமும் ஆடுகள் இறந்து கொண்டே இருக்கிறது. இதுவரை எந்த நிவாரணமும் எங்களுக்கு வழங்கப்படவில்லை, ஆகவே, இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். 

Next Story