வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 10:30 PM GMT (Updated: 18 Dec 2018 9:02 PM GMT)

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலை,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் உற்சவ பெருமாள் சுவாமி பரமபத வாசல் வழியாக பக்தர்கள் சென்றனர். தொடர்ந்து நீலமேகப்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்தார். தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பொதுமக்கள் வரிசையில் நின்று சிறப்பு அர்ச்சனைகள் செய்து மூலவர் மற்றும் உற்சவரை வழிபட்டனர். இதில் மூலவர் மற்றும் உற்சவ சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இதேபோல் வைகநல்லூர் அக்ரகாரத்தில் உள்ள லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து இதையடுத்து லெட்சுமி நாராயண பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உப்பிடமங்கலம் அருகே புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. கோவிலில் உள்ள சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் அந்த வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடிநின்ற பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல கிருஷ்ணராயபுரத்தில் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பரமபதவாசல் வழியாக பவனி வந்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா... என பக்தி பரவசத்தோடு முழக்கமிட்டனர். பின்னர் உற்சவர் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

இதேபோல மகாதானபுரம் அக்ரகாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள், கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. இதையொட்டி ஸ்ரீதேவி பூமதேவி சமேத கல்யாண வரதராஜ பெருமாள் உற்சவர் புறப்பட்டு பரமபத வாசல் வழியாக பவனி வந்து கோவிலை சுற்றி உலா வந்தார். இதேபோல கிருஷ்ணராயபுரம் கோவக்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல நொய்யல் அருகே கோம்புபாளையத்தில் உள்ள சீனிவாசபெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி சுவாமிக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு பூக்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story