பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் கலெக்டர் கந்தசாமி பேச்சு


பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் கலெக்டர் கந்தசாமி பேச்சு
x
தினத்தந்தி 19 Dec 2018 11:00 PM GMT (Updated: 19 Dec 2018 4:10 PM GMT)

பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கந்தசாமி பேசினார்.

திருவண்ணாமலை,

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்பது குறித்து வட்டார செயல்பாடு குழு உறுப்பினர்களுக்கான ஒருமுனைப்படுத்துதல் பயிற்சி கூட்டம் திருவண்ணாமலை பூமாலை வணிக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றினார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் ஜெயக்குமார், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பாண்டியன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் தமிழரசி வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:-

பெண் குழந்தைகள் நல்ல நிலையில் இல்லை என்பதே யதார்த்த உண்மை. எனவே அவர்களுக்கு மரியாதையான உலகத்தை உருவாக்க வேண்டும். சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அவர்களை யாரும் சமமாக பார்ப்பது இல்லை. பெண்களுக்கான சம உரிமை அளிக்கப்பட வேண்டும். வீடுகளில் பெண் குழந்தைகள் பாசமாக வளர்க்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களுக்கு சேர வேண்டிய சொத்து பிரித்து கொடுப்பதில்லை.

கடந்த ஆண்டு ஆயிரம் ஆண்களுக்கு 882 பெண்கள் தான் உள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இது இப்படியே சென்றால் சில ஆண்டுகளில் பெண் பிறப்பின் சதவீதம் மிகவும் குறைந்து விடும். 10 மாவட்டங்களில் இந்த குறைபாடு கண்டறியப்பட்டு அதை சரிசெய்து வருகின்றனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பயிற்சியின் நோக்கத்தை மனதில் உள்வாங்கி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story