கோர்ட்டு வளாகத்தில் வாலிபரை கொல்ல முயன்ற 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


கோர்ட்டு வளாகத்தில் வாலிபரை கொல்ல முயன்ற 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 19 Dec 2018 10:15 PM GMT (Updated: 19 Dec 2018 8:07 PM GMT)

கோவை கோர்ட்டு வளாகத்தில் வாலிபரை கொல்ல முயன்ற 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

கோவை சுங்கம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 22). இவர் முன்விரோதம் காரணமாக ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த 16-ந் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தினமும் கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்தார்.

இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி காலை வழக்கம் போல் சூர்யா கோர்ட்டுக்கு கையெழுத்து போட வந்தார். அப்போது கோர்ட்டு வளாகத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக்கின் தம்பியான ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த தீபக், அவருடைய நண்பர்கள் சஞ்சய், சுஜித் ஆகிய 3 பேரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள் மற்றும் கத்தியால் சூர்யாவின் தலை மற்றும் முதுகு பகுதியில் வெட்டி கொல்ல முயன்றனர்.

இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக், சஞ்சய், சுஜித் ஆகிய 3 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டார்.

ஏற்கனவே அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதால் அந்த உத்தரவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

Next Story