கணினி வாங்கியதில் முறைகேடு: திண்டுக்கல் கோர்ட்டில், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்


கணினி வாங்கியதில் முறைகேடு: திண்டுக்கல் கோர்ட்டில், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சாட்சியம்
x
தினத்தந்தி 19 Dec 2018 10:15 PM GMT (Updated: 19 Dec 2018 11:24 PM GMT)

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணினி வாங்கியதில் முறைகேடு நடந்த வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில், முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு கணினிகள் மற்றும் அலுவலகத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சோதனை நடத்தினர். 

மேலும் அங்கு பணியாற்றுபவர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, பொருட்கள் வாங்கியதில் ரூ.2 லட்சம் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. பின்னர், இதுகுறித்து 2 பேர் மீது கடந்த 2015-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், சம்பவம் நடந்தபோது திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சந்திரசேகரன் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பணி ஓய்வுபெற்றுவிட்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நம்பிராஜ் முன்பு, முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

Next Story