தாம்பரம்- கொளப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை


தாம்பரம்- கொளப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2018 9:45 PM GMT (Updated: 20 Dec 2018 5:32 PM GMT)

தாம்பரம்-கொளப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் ஆலப்பாக்கம், சதானந்தபுரம், நெடுங்குன்றம், கொளப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மாணவ-மாணவிகள் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் உள்ளவர்கள் தனியார் மற்றும் அரசு துறைகளில் சென்னை நகர் பகுதியில் சென்று வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் காலை, மாலை நேரங்களில் அரசு பஸ்சில் செல்லும்போது அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ் படிக் கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

ஆலப்பாக்கம், சதானந்தபுரம் பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இதன் காரணமாக ஆலப்பாக்கம், சதானந்தபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தினமும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தாம்பரத்தில் இருந்து நெடுங்குன்றம் வழியாக கொளப்பாக்கத்திற்கு காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story