பெருந்துறையில் கடைகளில் அதிகாரிகள் சோதனை: தடை செய்யப்பட்ட 550 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


பெருந்துறையில் கடைகளில் அதிகாரிகள் சோதனை: தடை செய்யப்பட்ட 550 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 20 Dec 2018 5:36 PM GMT)

பெருந்துறையில் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட 550 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெருந்துறை, 

பெருந்துறை நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று, பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா தலைமையில் பேரூராட்சி குழுவினர் நேற்று காலை முதல் மதியம் வரை, குன்னத்தூர் ரோடு, ஈரோடு ரோடு, நால்ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

பொரிக்கடை, பூக்கடை, ஓட்டல், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், ஜவுளிக்கடை, இனிப்பு, பலகாரக்கடை ஆகிய கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் 6 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 550 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரை என மொத்தம் ரூ.5 ஆயிரத்து 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் உஷா கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வதை, வியாபாரிகள் கைவிட வேண்டும். இதை மீறி செயல்படும் கடைகள் மற்றும் அந்த உரிமையாளர்கள் மீது, இனிவரும் காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்ற சோதனைகள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மீண்டும் நடத்தப்படும்’ என்று கூறினார்.

Next Story