நாட்டறம்பள்ளி அருகே கொலையான பெண்ணின் கள்ளக்காதலன் மர்மச்சாவு போலீசார் விசாரணை


நாட்டறம்பள்ளி அருகே கொலையான பெண்ணின் கள்ளக்காதலன் மர்மச்சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Dec 2018 10:00 PM GMT (Updated: 21 Dec 2018 1:43 PM GMT)

நாட்டறம்பள்ளி அருகே கொலையான பெண்ணின் கள்ளக்காதலன் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக கிடந்தர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டறம்பள்ளி, 

நாட்டறம்பள்ளியை அடுத்த சுண்ணாம்புகுட்டையை சேர்ந்தவர் வளர்மதி (வயது 50), கூலி தொழிலாளி. இவரது கணவர் பெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டார். 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகன் படித்து முடித்துவிட்டு வீட்டில் உள்ளார்.

இந்த நிலையில் விறகு எடுக்க சென்ற வளர்மதி அப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.

போலீசார் விசாரணையில், வளர்மதிக்கு சிவலிங்கம் (40) என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. வளர்மதி கொலை செய்யப்பட்டதில் இருந்தே சிவலிங்கம் மாயமாகி இருந்ததால், அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள மரத்தில் சிவலிங்கம் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவலிங்கத்தை யாராவது கொலை செய்து வந்து தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? இவருக்கும் வளர்மதியின் கொலைக்கும் தொடர்பு இருக்குமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story