பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி


பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2018 10:00 PM GMT (Updated: 21 Dec 2018 5:27 PM GMT)

பொன் மாணிக்கவேல் மீதான புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. இதனை நேற்று காலை தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் அப்பாண்டைராஜ், முத்து, ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ், சுப்பையா, மணிகண்டன், கூட்டுறவு சங்க தலைவர்கள் லட்சுமிநாராயணன், பூர்ணராவ், நரசிம்மன், நாகப்பன், இயக்குனர்கள் ஜோதிராஜா, முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினை யை பொறுத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக மதிக்க வேண்டும். அதன்படி காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணைகள் கட்டுவதாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமல் செயல்படுத்த கூடாது அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றுதான் தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறது.

சிலை தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் மீது அவர் கீழ் பணியாற்றுகின்ற பல்வேறு நிலையில் உள்ள காவல்துறையினர், தங்களை பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், பணியில் குறுக்கிடுவதாகவும், மேலும் வழக்கு விசாரணையில் தலையிடுவதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார்கள் மீது அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருக்கிறது. அவர் தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை மனிதர்களாகவே நடத்துவதில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளது. இன்னும் அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படவில்லை, தான் நிரபராதி என்றால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டும், தான் நியாயமானவர், நேர்மையானவர் என்றால் அதை பொன் மாணிக்கவேல் நிரூபித்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story