குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 24 Dec 2018 11:32 PM GMT (Updated: 24 Dec 2018 11:32 PM GMT)

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்துக்கு உட்பட்ட நெடுங்கூர், ஆரியூர், க.பரமத்தி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், நெடுங்கூரில் தனியார் நிறுவனம் சார்பில் இரும்புகம்பி தொழிற்சாலை அமைக்கப் பட இருக்கிறது. இதையொட்டி அங்கு அதிக ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவதாக தெரிகிறது. இந்த தொழிற்சாலையிலிருந்து இரும்பு பொருட்களை பதப்படுத்தும் போது வெளியேறும் கொதி நீரால் அருகிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டமும் குறையக்கூடும். எனவே இந்த இரும்புதொழிற்சாலையை நிறுவும் பணிகளை கைவிட வேண்டும் என அதில் கூறியிருந்தனர். மேலும் அந்த ஆலையை தடுத்து நிறுத்தக்கோரி கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களையும் மனுவுடன் சமர்ப்பித்து கொடுத்தனர்.

கரூர் அருகே மணவாடி கிராமம் மாணிக்கபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரிலுள்ள மேல்நிலைநீர்தேக்க தொட்டி பழுதடைந்து இருப்பதால் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல், இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) மாவட்ட தலைவர் மணி தலைமையில், கிருஷ்ணராயபுரம் தாலுகா முனையனூர் சமத்துவபுரம் மக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் எங்கள் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் மேலாண்மை பணிகளை கையாண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

கரூர் மாவட்ட அனைத்து கட்சியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் கையில் மரக்கலப்பை, சாகுபடி பயிர்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து மனு கொடுத்தனர். அதில், மீன் பிடிப்பவர்களை மீனவர் என்றும், நெசவில் ஈடுபடுபவர்களை நெசவாளர் என்றும் அழைக்கிறோம். அந்த வகையில் பள்ளர் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் அழைக்கப்படும் நாங்கள் காலங்காலமாக தொன்று தொட்டு வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எனவே அந்த ஏழு உட்பிரிவுகளையும் இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பெயர் திருத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கரூர் மாவட்ட நிர்வாகம் அரசுக்கு எடுத்துரைத்து, இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இது தொடர்பான ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மலைக்கொழுந்தன் மற்றும் ஆசிரியர்கள் மனு கொடுத்தனர். அதில், சிறப்பு நிலை கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்கள் 3 பேருக்கு ஊதியத்தை விரைவில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

கரூர் மாவட்ட சாலையோர தரைக்கடை, தள்ளுவண்டி சிறுவியாபாரிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், கரூர் கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தள்ளு வண்டியிலும், தரைக்கடை வைத்தும் வியாபாரம் செய்து வருகிறோம். இந்த நிலையில் எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் போலீஸ்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே நாங்கள் வழக்கம் போல் வியாபாரம் செய்திட வழிவகை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story