சமயபுரம் அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


சமயபுரம் அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Dec 2018 10:42 PM GMT (Updated: 25 Dec 2018 10:42 PM GMT)

சமயபுரம் அருகே ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சமயபுரம்,

சமயபுரம் போலீஸ் சரகம் மேட்டு இருங்களூர் அன்னை நகரை சேர்ந்தவர் லீமா (வயது 50). இவர் சமயபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் பவுல்ரோச் உடல்நல குறைவால் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் தனியாக வசித்து வந்த லீமா நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி பூவாளூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு 1.30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நெக்லஸ், செயின், தங்க காசு உள்பட 11 பவுன் நகைகளும், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்கமும் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் திருட்டு நடந்த வீட்டின் எதிர் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்று ஆய்வு செய்தபோது கேமரா வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் திருச்சியிலிருந்து வந்திருந்த விரல் ரேகை நிபுணர்களும், தடயங்களை ஆய்வு செய்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறிசொல்பவர்கள் போல் சில பெண்கள் அந்த பகுதியில் நடமாடியதாகவும், அவர்கள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், அதில் வசிப்பவர்களையும் நோட்டமிட்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள் என்று திட்டமிட்டு இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story