சேலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


சேலம் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Dec 2018 11:00 PM GMT (Updated: 26 Dec 2018 10:33 PM GMT)

சேலம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

கணினி, இணையதள வசதி வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று 17-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள டவுன் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சேகர் உள்பட ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், இணையதள வசதி வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், சேலம் மேற்கு மற்றும் தெற்கு தாலுகா அலுவலகங்கள் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story