கயத்தாறு அருகே அறுவடை எந்திரத்தில் சிக்கி பெண் படுகாயம்


கயத்தாறு அருகே அறுவடை எந்திரத்தில் சிக்கி பெண் படுகாயம்
x
தினத்தந்தி 28 Dec 2018 9:30 PM GMT (Updated: 28 Dec 2018 2:52 PM GMT)

கயத்தாறு அருகே அறுவடை எந்திரத்தில் சிக்கி பெண் படுகாயம் அடைந்தார்.

கயத்தாறு, 

கயத்தாறு அருகே அறுவடை எந்திரத்தில் சிக்கி பெண் படுகாயம் அடைந்தார்.

உளுந்து அறுவடை செய்தபோது...

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பண்டாரம். இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது தோட்டத்தில் உளுந்து அறுவடை செய்யும் பணிக்கு சென்றார். தொழிலாளர்கள் உளுந்து செடிகளை அறுவடை செய்தனர்.

பின்னர் உளுந்து செடிகளில் இருந்து உளுந்தினை தனியாக பிரிப்பதற்காக, அவற்றை உளுந்து அறுவடை எந்திரத்துக்குள் அள்ளி போட்டனர். பாப்பாத்தி உளுந்து செடிகளை அறுவடை எந்திரத்துக்குள் அள்ளி போட்டார். அப்போது அவரது தலையில் சுற்றி வைத்திருந்த துணி, தலைமுடியுடன் சேர்த்து எதிர்பாராதவிதமாக அறுவடை எந்திரத்துக்குள் சிக்கியது.

படுகாயம்

இதனால் பாப்பாத்தியின் தலைமுடி முழுவதும், அறுவடை எந்திரத்தால் பிய்த்து எடுக்கப்பட்டதால் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் அறுவடை எந்திரத்தை நிறுத்தி, பாப்பாத்தியை காப்பாற்றினர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story