மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி - கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு


மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி  - கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 28 Dec 2018 10:15 PM GMT (Updated: 28 Dec 2018 7:55 PM GMT)

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு கூடுதலாக ஒரு மணி நேரம் நடத்த கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

மதுரை, 

மதுரை மாவட்டத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அதன்படி அடுத்த மாதம் 15-ந்தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. இந்த நேரத்திற்குள் அனைத்து காளைகளையும் அவிழ்த்து விட முடியவில்லை. எனவே நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி முதல் மாலை 4 மணி நேரம் வரை நடைபெறுகிறது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மேலூர் வருவாய் கோட்டாட்சியர், பாலமேடு-அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து கலெக்டர் நடராஜன் விளக்கிகூறினார். அவர் தெரிவித்ததாவது:-

ஜல்லிக்கட்டு விழா நடத்த விருப்பமுள்ள தனி நபரோ, அமைப்போ அல்லது குழுக்களோ, ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நாள் மற்றும் இடம் ஆகியவை குறித்து அரசாணை வெளியிட ஏதுவாக மனு அளிக்க வேண்டும். காளைகளுக்கு போதைப்பொருள், எரிச்சலூட்டும் பொருட்கள், ஊக்கமருந்து ஆகியவை பயன்படுத்தக்கூடாது. கட்டவிழ்த்து விடுவதற்கு முன்பு காளைகள் சுமார் 20 நிமிடம் ஓய்வில் இருக்க வேண்டும். காளைகள் நிறுத்தி வைக்கப்படும் தொழுவத்தில் ஒவ்வொரு காளைகளுக்கும் இடையே இடைவெளி 60 சதுர அடி இருக்க வேண்டும். மேலும் அவைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். காளை உரிமையாளர் காளையின் அருகில் நின்று கொள்ள போதுமான வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாத்திடும் பொருட்டு காளைகள் நிறுத்தி வைக்கப்படும் தொழுவத்தில் மேற்கூரை அமைக்கப்பட வேண்டும். காளைகளை நிறுத்தி வைக்கும் தொழுவம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். தேவையான இடங்களில சி.சி.டி.வி. கேமரா பொருத்தி அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். காளைகள் எதுவும் கயிறுடன் வாடிவாசலுக்குள் செல்ல அனுமதிக்ககூடாது. ஜல்லிக்கட்டு நடத்திட உத்தேசித்துள்ள இடமானது குறைந்தது 50 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்க வேண்டும். மாடு பிடி வீரர்கள் இந்த 50 சதுர மீட்டர் பகுதியில் தான் காளைகளை அடக்கிட வேண்டும். காளைகளின் கொம்புகள் கூர்மையாக சீவப்பட்டிருக்கும் பட்சத்தில் கூர்மையான பகுதிகளுக்கு மரக்கவசம் அமைத்திருக்க வேண்டும். காளைகளை எந்தவிதத்திலும் கொடுமை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதன்தொடர்ச்சியாக கலெக்டர் நடராஜன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

Next Story