போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மெரினா லூப் சாலையில் மீண்டும் மீன் வியாபாரம் தொடங்கியது பள்ளத்தை மேடாக்கி மீனவ பெண்களே கடைகள் அமைத்தனர்


போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மெரினா லூப் சாலையில் மீண்டும் மீன் வியாபாரம் தொடங்கியது பள்ளத்தை மேடாக்கி மீனவ பெண்களே கடைகள் அமைத்தனர்
x
தினத்தந்தி 29 Dec 2018 11:00 PM GMT (Updated: 29 Dec 2018 5:03 PM GMT)

போக்குவரத்துக்கு சிறிதும் இடையூறு இல்லாமல் மெரினா லூப் சாலையில் மீண்டும் மீன் வியாபாரம் ஜோராக நடக்க தொடங்கியிருக்கிறது. மாநகராட்சி விதிகளை மீறாமல் பள்ளத்தை மேடாக்கி மீனவ பெண்களே கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

சென்னை மெரினா நொச்சிகுப்பத்தில் இருந்த மீனவர்களின் பயன்பாட்டு சாலை, ‘சென்னை மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டம்’ காரணமாக லூப் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.55 கி.மீ. தூரமுள்ள இச்சாலையை ரூ.47 கோடியில் சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த சில நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் சம்மதித்தது.

இந்த திட்டத்தின்படி, லூப் சாலையில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மீன்கடைகள் பட்டினப்பாக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும், அதற்காக அங்கு மீன் அங்காடி ஒன்று கட்டப்படும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்தது. இதற்கு அங்குள்ள மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில் மாநகராட்சியின் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மயிலை நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில் 15 மீனவ கிராம சபை மக்கள் பங்கேற்றனர். அக்கூட்டத்தில் ‘மெரினா லூப் சாலையை மீண்டும் பொது பயன்பாட்டு சாலையாக அறிவிக்க வேண்டும்’, உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது.

அதேவேளையில் ‘மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டம்’ தங்கள் வாழ்வாதாரத்தை கெடுத்துவிடக்கூடாது என்றும், மீன் கடைகள் எவ்விதத்திலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று கருதியும் அப்பகுதி மீனவ பெண்கள் முடிவு எடுத்தனர். அதன்படி லூப் சாலையின் இருபுறமும் இருந்த தங்கள் மீன் கடைகளை தாங்களே சீரமைக்க ஆயத்தமானார்கள்.

சாலையில் இருந்து 5 அடி முதல் 7 அடி வரை பின்னோக்கி சென்று பள்ளமான பகுதியை மேடாக்கி, அங்கு தங்கள் மீன் கடைகளை அமைக்க முயன்றனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்ததால் இக்கடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் கடந்த 3 நாட்கள் அங்கு மீன் விற்பனை நடைபெறவில்லை.

இந்தநிலையில் சாலையின் இருபுறத்தில் சில அடி தூரம் பின்னோக்கி சென்று கடைகள் அமைத்து மீனவ பெண்கள் தங்கள் மீன் வியாபாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் லூப் சாலையில் வழக்கமான பரபரப்பு தொற்றிக் கொள்ள தொடங்கியிருக்கிறது. மேலும் முன்பு போல சாலையில் நின்று போக்குவரத்துக்கு இடையூறாக மக்கள் மீன்வாங்கும் நிலை தற்போது இல்லை. சில அடி தூரம் கடைகள் பின் நோக்கி அமைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத நிலை இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க தலைவர் கபடி பி.மாறன், தென்னிந்திய மீனவர் நலச்சங்க தலைவர் கு.பாரதி ஆகியோர் கூறியதாவது:-

மெரினா லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை யாரும் அகற்றிடவில்லை. எங்கள் மீனவ பெண்களே அதை ஒழுங்கு படுத்தியிருக்கிறார்கள். அதேவேளையில் மாநகராட்சியின் துப்புரவு பணியும் அப்போது நடந்ததால் கடைகள் இடித்து அகற்றப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு இருக்கிறது. சொல்லப்போனால் இது மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் நிகழ்வு தான்.

அதேவேளை நொச்சிக்குப்பம் கடற்கரை மீனவ மக்களின் பொது பயன்பாட்டு சாலையை அதிவிரைவு போக்குவரத்து சாலையாக மாற்றியதோடு, இப்போது அங்குள்ள மீன்கடைகளை மாற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளதை ஏற்கவே முடியாது. வேண்டுமென்றால் சாந்தோம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி கொள்ளட்டும். மெரினா லூப் சாலையை மீண்டும் பொது பயன்பாட்டு சாலையாக அறிவிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டால் மீனவ மக்கள் ஒன்றிணைந்து போராடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story