செயல்படாத நிர்வாகிகள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேச்சு


செயல்படாத நிர்வாகிகள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2018 11:00 PM GMT (Updated: 31 Dec 2018 8:43 PM GMT)

வட்டார அளவில் பூத் கமிட்டி அமைக்காமல் செயல்படாத நிர்வாகிகள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று ஆய்வு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேசினார்.

திருச்சி,

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்கூட்டம் நேற்று காட்டூரில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ் முன்னிலை வகித்தார். பொன்மலை கோட்ட தலைவர் முத்து வரவேற்றார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டு பேசினார். மாநில செயலாளர் அருள் பெத்தய்யா, மாவட்ட பொருளாளர் ராஜா நசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அந்தநல்லூரில் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் வட்டார அளவிலான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டு பேசியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவின்படி எல்லா வட்டாரங்களிலும் 100 சதவீதம் பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும், ராகுல் காந்தியை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராக்க பாடுபட வேண்டும். ஒவ்வொரு மாதமும் பூத் கமிட்டி, வட்டார கமிட்டி கூட்டங்களை நிர்வாகிகள் நடத்த வேண்டும். வட்டார அளவில் பூத் கமிட்டி அமைக்காமல் செயல்படாத நிர்வாகிகள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் கோபால், ராஜலிங்கம் மற்றும் வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Next Story