திருமணமான 20 நாளில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தற்கொலை


திருமணமான 20 நாளில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 31 Dec 2018 11:06 PM GMT (Updated: 31 Dec 2018 11:06 PM GMT)

திருமணமான 20 நாளில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மேட்டு காலனியை சேர்ந்தவர் மனோகரன், தொழிலாளி. அவருடைய மகன் சாந்தகுமார் (வயது 27). டிரைவரான இவர் சென்னை பெருங்குளத்தூர் பகுதியில் தனியார் தண்ணீர் லாரி ஓட்டி வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரின் மகள் திவ்யா (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் திவ்யாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி இருவரும் பெருங்குளத்தூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திவ்யாவை அவரது காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காதல் ஜோடி இருவரும் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக ஏர்வாடி வந்தனர். பின்னர் காதலனின் பெற்றோர் வீட்டில் அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் பெற்றோர் வீட்டில் செல்லமாக வளர்ந்த திவ்யா, காதலுக்கு பின் காதலனுடன் ஏழ்மையில் வசிப்பதை விரும்பவில்லை.

இதனால் மீண்டும் தனது பெற்றோர் உதவியை நாடினார். மகள் துடிப்பதை அறிந்த பெற்றோர், மகளை சென்னைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த 29–ந் தேதி அவரது பெற்றோர் ஏர்வாடி வந்து திவ்யாவை தங்களுடன் அழைத்துச் சென்றனர். காதல் மனைவி தன்னுடன் வாழ விரும்பாமல் பெற்றோருடன் சென்றதை அறிந்த சாந்தகுமார், கடந்த 2 நாட்களாக சோகத்துடன் காணப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சாந்தகுமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story