காய்கறி வாங்க துணிப்பையுடன் வந்தவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து மரியாதை


காய்கறி வாங்க துணிப்பையுடன் வந்தவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 1 Jan 2019 6:51 PM GMT)

வடுவூரில், காய்கறி வாங்க துணிப்பையுடன் வந்தவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது.

வடுவூர்,

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை தமிழகம் முழுவதும் நேற்று அமல்படுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பாலிதீன் பையை கடைகளில் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம், துணிப்பை, சணல் பை, ஒயர் கூடை உள்ளிட்டவற்றை எடுத்து வரும்படி வியாபாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஓட்டல்களில் உணவு பொருட்களை வாங்கி செல்ல பாத்திரங்களை எடுத்துவரும்படி வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிவிப்பு பலகைகளும் தொங்க விடப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த இளைஞர்கள் கடந்த சில வாரங்களாக பிளாஸ்டிக் ஒழிப்பின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.

வடுவூர் பகுதி பொதுமக்கள் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் வடுவூரில் உள்ள 2 காய்கறி கடைகளில் நேற்று காய்கறி வாங்க துணிப்பை மற்றும் ஒயர் கூடையை கொண்டு வந்தவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கடை உரிமையாளர்கள் செய்து இருந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகளுக்கு தமிழக அரசு தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் அறிவிப்பு. இதற்காக வருத்தப்பட தேவையில்லை. இது நல்ல நடைமுறை ஆகும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர். 

Next Story