மயிலாடுதுறை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைப்பு


மயிலாடுதுறை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 1 Jan 2019 6:56 PM GMT)

மயிலாடுதுறை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மயிலாடுதுறை,

ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாற்றாக 14 வகையான பொருட்களை பயன்படுத்தலாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அரசின் இந்த தடைக்கு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன்படி நேற்று முதல் மயிலாடுதுறை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகளில் பிளாஸ்டிக் கேரி பைகள், பிளாஸ்டிக் தட்டு மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அடைக்கப்பட்ட கடைகளின் வாசலில் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற கடையடைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று அறிவிப்பு காகிதம் ஒட்டப்பட்டுள்ளது. இதைப்போல மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் முதற் கட்டமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீதும், அதனை பயன்படுத்துவோர் மீதும் அதிகமாக அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் கூறியதாவது:-

வாழ்வாதாரம் கேள்விக்குறி

பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே எங்கள் கடைகளில் வைத்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது இந்த பொருட்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் வேதனை அடைந்துள்ளோம். கோடிக்கணக்கான சிறு வணிகர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்யாமல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story