சேலத்தில், காதல் திருமணம் செய்த கார் டிரைவர் மர்மசாவு


சேலத்தில், காதல் திருமணம் செய்த கார் டிரைவர் மர்மசாவு
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 2 Jan 2019 12:16 AM GMT)

சேலத்தில் காதல் திருமணம் செய்த கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்ததாக உறவினர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

சேலம், 


ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சுந்தரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 26), கார் டிரைவர். இவர் சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த சவுந்தர்யா (25) என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சந்தோஷ் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது. வள்ளுவர் நகர் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக்கொண்டு சவுந்தர்யா அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் சதீஷ்குமார் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சதீஷ்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று சதீஷ்குமாரின் தந்தை சுப்ரமணி மற்றும் உறவினர்கள் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தனர். அதில் சதீஷ்குமார் சாவில் மர்மம் உள்ளது. மேலும் அவருடைய மனைவி, குடும்பத்தினர் மீது சந்தேகிக்கிறோம். எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story