ஆத்தூர் அருகே செவ்வரணை கடித்து கல்லூரி மாணவி பலி


ஆத்தூர் அருகே செவ்வரணை கடித்து கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 9:04 PM GMT)

ஆத்தூர் அருகே செவ்வரணை கடித்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவன்வடலியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 51), விவசாயி இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு வைகுண்ட செல்வி (18), பேச்சியம்மாள் (15) ஆகிய 2 மகள்கள். வைகுண்ட செல்வி, காயல்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். பேச்சியம்மாள், ஆத்தூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். இவர்களது வீட்டில் கழிப்பறை கிடையாது.

நேற்று முன்தினம் மாலையில் வைகுண்ட செல்வி இயற்கை உபாதையை கழிப்பதற்காக, தனது வீட்டின் பின்புறம் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது அவரது காலின் பெருவிரலில் செவ்வரணை கடித்துள்ளது. இதனால் அவருடைய காலில் வீக்கம் ஏற்பட்டது.

உடனே அவருக்கு ஆறுமுகநேரி தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வீட்டில் கழிப்பறை இல்லாததால், காட்டில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற கல்லூரி மாணவி, செவ்வரணை கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story