மரக்காணம் அருகே, சாலையோரம் வீடு கட்ட எதிர்ப்பு; இருதரப்பினர் வாக்குவாதம்


மரக்காணம் அருகே, சாலையோரம் வீடு கட்ட எதிர்ப்பு; இருதரப்பினர் வாக்குவாதம்
x
தினத்தந்தி 3 Jan 2019 10:45 PM GMT (Updated: 3 Jan 2019 6:58 PM GMT)

மரக்காணம் அருகே சாலையோரம் வீடு கட்ட எதிர்ப்பு தெரிவித்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மரக்காணம்,

மரக்காணம் அருகே அனுமந்தை பஸ் நிறுத்தம் வழியாக மீனவர் குப்பத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரம் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மீனவர் பஞ்சாயத்தார்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.

இதை அறிந்த மற்றொரு தரப்பினரும் அங்கு வந்தனர். பின்னர் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதை அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரு தரப்பினருக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினர் பிரச்சினையால் அனுமந்தை கிழக்கு கடற்கரை சாலையில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. அங்கு மரக்காணம் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story