சபரிமலையில் பெண்கள் சாமி தரிசனம்: இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


சபரிமலையில் பெண்கள் சாமி தரிசனம்: இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2019 10:45 PM GMT (Updated: 3 Jan 2019 9:25 PM GMT)

சபரிமலையில் பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

கேரளா சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனம் செய்ய தடை இருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீவிரமாக உள்ளது. இதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே சபரிமலைக்கு தரிசனத்துக்காக சென்ற பெண்கள் பலர் பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பிந்து, கனகதுர்கா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அதிகாலை சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் தரிசனம் செய்ததற்கும், கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், மற்றும் அம்மாநில காவல்துறையை கண்டித்தும் புதுச்சேரி இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாரம் அவ்வை திடலில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்ட தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். புதுவை மாநில பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., செல்வகணபதி எம்.எல்.ஏ., துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்து முன்னணி செயலாளர் முருகையன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி இந்து முன்னணி, பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் இந்து முன்னணி பொதுச்செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Next Story