அண்ணாநகரில் ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது


அண்ணாநகரில் ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
x
தினத்தந்தி 4 Jan 2019 10:15 PM GMT (Updated: 4 Jan 2019 5:33 PM GMT)

அண்ணாநகரில் ரவுடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லி,

சென்னை அண்ணாநகர் அன்னை சத்யாநகர், 2-வது மெயின்ரோட்டை சேர்ந்தவர் சந்தானம்(வயது 36). ரவுடியான இவர், தற்போது திருந்தி, பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த 2-ந்தேதி இரவு அன்னை சத்யா நகர், 8-வது தெரு சந்திப்பில் பெட்டிக்கடை வைத்துள்ள தனது தாய் ஷீபாராணியை பார்க்க சென்றபோது, மர்மநபர்கள் சந்தானத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்த ராபர்ட், அவருடைய தம்பி ஜோசப் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் ரவுடியிசம் வேண்டாம் என அறிவுரை கூறியதால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை அண்ணா நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராபர்ட்(21) என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் அவர், நடுவாங்கரை கூவம் அருகே பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் அண்ணாநகர் போலீசார் அங்கு சென்றனர்.

போலீசாரை கண்டதும் ராபர்ட் தப்பியோட முயற்சி செய்தார். அப்போது கால் தவறி விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிந்தது. ராபர்ட்டை, போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

பின்னர் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story