மத்திய அரசு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு கியாஸ் இணைப்பு வழங்கப்படும்; மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பேட்டி


மத்திய அரசு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு கியாஸ் இணைப்பு வழங்கப்படும்; மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 4 Jan 2019 10:30 PM GMT (Updated: 4 Jan 2019 9:44 PM GMT)

மத்திய அரசு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து பெண்களுக்கும் விலையில்லா கியாஸ் இணைப்பு வழங்கப்படும் என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கூறினார்.

திருப்பூர்,

மத்திய அரசு சார்பில் பெண்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட விலையில்லா வீட்டு உபயோக கியாஸ் இணைப்பு திட்டம் (உஜ்வாலா யோஜனா) 2 தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று திருப்பூர் கொங்குமெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ கவுரி துர்க்கா கியாஸ் வினியோக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனை இந்த திட்டத்தின் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ரகு குமார் புக்கியா தொடங்கிவைத்தார். ஸ்ரீ கவுரி துர்க்கா பாரத் கியாஸ் திருப்பூர் வினியோகஸ்தர் சாமுவேல் முன்னிலை வகித்தார். இதன் பின்னர் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ரகு குமார் புக்கியா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசு பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்து வந்துகொண்டிருக்கிறது. அதன்படி நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக விரிவுபடுத்தப்பட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து பெண்களுக்கும் விலையில்லா கியாஸ் இணைப்பு வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் கியாஸ் இணைப்பு வழங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் 56 உள்ளன.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் பொதுத்துறை நிறுவன அலுவலகங்களுக்கு சென்று, இந்த திட்டம் குறித்த படிவத்தை பெற்று அதனை நிரப்பி விரைவாக கியாஸ் இணைப்பை பெற்றுக்கொள்ளலாம். முதன் முதலாக இணைப்பை பெறும் பயனாளிகளுக்கு கியாஸ் அடுப்பு உள்பட அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் பின்னர் இரண்டாவதாக கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது சிலிண்டருக்கான பணத்தை மட்டும் பயனாளிகள் செலுத்தினால் போதும். அதற்கான மானியமும் அவர்களுக்கு வழங்கப்படும். எனவே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story