விடுதியில் பிணமாக கிடந்த சிறுமி: தாயும், மகள்களும் முதியவருடன் வேளாங்கண்ணி வந்ததன் மர்மம் என்ன? போலீசார் விசாரணை


விடுதியில் பிணமாக கிடந்த சிறுமி: தாயும், மகள்களும் முதியவருடன் வேளாங்கண்ணி வந்ததன் மர்மம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Jan 2019 11:15 PM GMT (Updated: 5 Jan 2019 6:51 PM GMT)

வேளாங்கண்ணி விடுதியில் சிறுமி ஒருவர் பிணமாக கிடந்தார். அவரையும், அவருடைய தாய் மற்றும் தங்கையையும் முதியவர் வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்ததன் மர்மம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேளாங்கண்ணி,

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது70). இவர், தனது உறவினரான தனசேகரன் என்பவருடைய மனைவி ஜெயந்தி(29), ஜெயந்தியின் மகள்கள் மகாலட்சுமி(6), ஸ்ரீலட்சுமி(2) ஆகியோருடன் கடந்த 28-ந் தேதி வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

அந்த அறையில் கடந்த 2-ந் தேதி சிறுமி மகாலட்சுமி, மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி, ஸ்ரீலட்சுமி ஆகிய 3 பேரையும் காணவில்லை. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிறுமியின் சாவில் உள்ள மர்மம் விலகுவதற்கு முன்பாக அவருடன் வேளாங்கண்ணிக்கு வந்த கோபாலகிருஷ்ணன், ஜெயந்தி, ஸ்ரீலட்சுமி ஆகிய 3 பேரும் ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த தகவல் வேளாங்கண்ணி போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது மகள் மகாலட்சுமியின் உடலை வாங்குவதற்காக, தனசேகரன் நேற்று நாகை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரிடம் போலீசார், சிறுமியின் உடலை ஒப்படைத்தனர். அப்போது தனது மகளின் உடலை நாகையிலேயே அடக்கம் செய்யும்படி தனசேகரன், போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இதன்படி சிறுமியின் உடல் அடக்கம் நாகையிலேயே நடந்தது.

பின்னர் தனசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களுக்கு கோபாலகிருஷ்ணன் தாத்தா முறையாகும். அவருடைய வீடு எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளது. அவருக்கு மனைவி, குழந்தைகள் இல்லை என்பதால், எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். நாங்களும் சாப்பாடு கொடுத்து நல்ல முறையில் அனுசரித்து வந்தோம். அவர் மீது எங்கள் மனதில் எந்த சஞ்சலமும் இல்லை. இந்த நிலையில் எனது மனைவி மற்றும் மகள்களை மருத்துவமனைக்கு செல்வதாக கூறி அழைத்து சென்றார். அதன் பிறகு அவர்களை நான் பார்க்கவில்லை. 4 பேரும் இறந்த பிறகுதான் அவர்கள் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தது தெரியவந்தது. என் மனைவி, மகள்களை கோபாலகிருஷ்ணன் ஏன் வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்தார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கோபாலகிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று பார்த்தேன். அங்கு மலையாள மாந்திரீக புத்தகம், தாயத்து மற்றும் பூஜை பொருட்கள் கிடந்தன.

அவர் எனது மனைவி மற்றும் மகள்களை மூளை சலவை செய்து வேளாங்கண்ணிக்கு அழைத்து வந்துள்ளார். மகாலட்சுமி எப்படி இறந்தார்? என்பது பற்றி தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தாயும், மகள்களும் முதியவருடன் வேளாங்கண்ணிக்கு ஏன் வந்தனர்? சிறுமி எப்படி இறந்தார்? கோபாலகிருஷ்ணன் உள்பட 3 பேரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பதற்கான காரணங்கள் தொடர்ந்து மர்மமாகவே உள்ளன. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story