போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து சென்னையில், ஐ.டி. நிறுவன ஊழியர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி பீகாரைச் சேர்ந்த 9 பேர் கைது


போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து சென்னையில், ஐ.டி. நிறுவன ஊழியர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி பீகாரைச் சேர்ந்த 9 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2019 11:00 PM GMT (Updated: 5 Jan 2019 7:04 PM GMT)

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த, பீகார் மாநிலத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை பெருங்குடியில் செயல்படும் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்க்கும் 15 ஊழியர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வேலைபார்க்கும் நிறுவன வளாகத்தில் ஜூஸ் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் நாங்கள் வங்கி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஜூஸ் குடித்து வந்தோம். அந்த கடையில் ஜூஸ் குடிப்பதற்காக பணம் வாங்கமாட்டார்கள். வங்கி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தியே ஜூஸ் குடிக்க வேண்டும்.

அவ்வாறு ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தும்போது, அந்த ஜூஸ் கடை ஊழியர்கள் ஹிம்மர் என்ற கருவி மூலமாக எங்கள் ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை பதிவு செய்து, பின்னர் லேப்-டாப் மூலம் போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரித்து, எங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் வரை பணத்தை எடுத்து மோசடி செய்துவிட்டனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் செந்தில்குமார், கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா, சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரியா, மோகன், வின்சென்ட், துரைராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஜூஸ் கடை ஊழியர்கள் ராகுல் சிங், குந்தன்சிங், சுரேஷ்குமார், ராகுல் குமார், சுதிர், பிகாஸ் குமார், குந்தன்குமார், ராம்பீர் குமார், விபின் குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களிடம் இருந்து போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க பயன்படுத்திய ஹிம்மர் கருவி மற்றும் லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணத்தையும், ஏராளமான போலி ஏ.டி.எம். கார்டுகளையும் இவர்களிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

இவர்கள் தயாரித்த போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பீகார் மாநிலத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story