ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்


ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:30 PM GMT (Updated: 5 Jan 2019 8:34 PM GMT)

ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆலங்குடி,

ஆலங்குடியை அடுத்துள்ள காட்டுப்பட்டி கிராமத்தில் சாலையோரத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றப்பட்டது. தொடர்ந்து வெற்றிலை மாலையால் அலங்காரம் செய்யப்பட்டும், வடைமாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீரனூரில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், உறியடி விழாவும், சுவாமி வீதி உலா நடைபெறுகி றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணிக்குழு, நிரந்தர உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அனுமன் ஜெயந்தி மற்றும் மார்கழி அமாவாசையை முன்னிட்டு நேற்று காலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டும், பக்தர்கள் கொண்டு வந்த வடை மாலை, ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலைகளால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் அறந்தாங்கி சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர அறந்தாங்கி அரசு பணி மனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் நற்பணிமன்றத்தினர் செய்திருந்தனர்.

மணமேல்குடி அடுத்து பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் விச்சூர் பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

Next Story