கார்-லாரி நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்


கார்-லாரி நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:45 PM GMT (Updated: 5 Jan 2019 8:44 PM GMT)

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே இரட்டை மரத்தான் கோவில் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே மாயவரத்தில் இருந்து கோவை நோக்கி இரும்பு ஏற்றி கொண்டு வந்த லாரியும்- காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

லாலாபேட்டை,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் பைசல் அகமது (வயது 34). இவரது மனைவி நந்திரா பர்வீன் (30). இவர்களுக்கு பஷானா (9), பருவியா (7) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் பைசல் அகமது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரைக்காலில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றி பார்த்துவிட்டு, நேற்று அதிகாலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை பைசல் அகமது ஓட்டி வந்தார்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே இரட்டை மரத்தான் கோவில் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே மாயவரத்தில் இருந்து கோவை நோக்கி இரும்பு ஏற்றி கொண்டு வந்த லாரியும்- காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பக்கம் அப்பளம்போல நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி பைசல் அகமது, நந்திரா பர்வீன், குழந்தைகள் பஷானா, பருவியா ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் மாயவரத்தை சேர்ந்த செந்தில்குமார் (34) லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story