கரூர் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்


கரூர் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:30 PM GMT (Updated: 5 Jan 2019 8:50 PM GMT)

கரூர் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

உப்பிடமங்கலம்,

கரூர் மாவட்டம், புலியூர் அருகே கொல்லபாளையத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு துளசி மாலை 1008 வடைமாலை, வெற்றிலை மாலை ஆகியவை அணிவித்து பல்வேறு மலர்களைக் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயரை புஷ்ப வாகனத்தில் எழுந்தருள செய்து வீதிஉலா நடைபெற்றது. இதேபோல உப்பிடமங்கலம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

லாலாபேட்டை ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் பக்தி பாடல்கள் பாடப்பட்டது.

இதேபோல வேலாயுதம்பாளையம் அய்யப்பன் கோவிலில் அனுமானுக்கு நேற்று காலை வெண்ணெய்காப்பு மற்றும் வெற்றிலை மாலையுடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு வடைமாலை அணிவித்தும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல வரசக்தி ஆஞ்சநேயர் திருத்தேரில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோல் புன்செய் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனுமனுக்கு வடைமாலை அணிவித்தும், ஆப்பிள், திராட்சை, சாத்துக்குடி உள்ளிட்ட பலவகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகளும், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புன்னம்சத்திரம் அருகே குட்டக்கடையிலிருந்து புன்னம்செல்லும் சாலையில் அனுமந்தராய பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஜெயந்தி விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் துளசி, வெற்றிலை, வடமாலை மற்றும் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி மற்றும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

குளித்தலை நீலமேகப்பெருமாள் கோவில் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெற்றிலை, மாலை சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு அர்ச்சனைகள் செய்து சாமியை வழிபட்டனர். பின்னர் மாலை சுவாமியின் வீதிஉலா நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்பட்ட சுவாமியின் வீதிஉலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது.

வெள்ளியணை தெற்கு தெருவில் பழமையான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஜெயந்திவிழாவையொட்டி காலை மாயனூர் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு புனித தீர்த்தம், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வெற்றிலை, வடை மாலை ஆகியவை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .இதேபோல் கருடாழ்வாருக்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

Next Story