சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் மறியல்


சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் மறியல்
x
தினத்தந்தி 5 Jan 2019 11:37 PM GMT (Updated: 5 Jan 2019 11:37 PM GMT)

கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செந்துறை,

நத்தம் தாலுகா செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் கோட்டைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கிருந்து திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி செல்வதற்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டைப்பட்டி-எல்லைகாட்டுபட்டி இடையே 2 கி.மீ. தூரம் சாலை மிகவும் மோசமாக இருந்தது.

இதையடுத்து அந்த சாலையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சாலை தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டன. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்லும்போது தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை தொடங்க வேண்டும் என்று கோட்டைப்பட்டி கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோட்டைப்பட்டி கிராம மக்கள் நேற்று செந்துறை-துவரங்குறிச்சி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் தாசில்தார் ஜான் டக்ளஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்துக்குள் சாலை பணியை முடிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story