தமிழகத்தில் 9 இடங்களில் தாய்மார்களுக்கான ஒப்புயர்வு மையங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் 9 இடங்களில் தாய்மார்களுக்கான ஒப்புயர்வு மையங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 6 Jan 2019 11:00 PM GMT (Updated: 6 Jan 2019 8:15 PM GMT)

மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழகத்தில் 9 இடங்களில் தாய்மார்களுக்கான ஒப்புயர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக, தீக்காய சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இந்திய அளவில் முதன்மை சுகாதாரத்துறையாக விளங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள நிதி ஆயோக் பரிந்துரையின்படி கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை 3-ம் இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 2-ம் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்து உள்ள சுகாதார குறியீடுகளின்படி தமிழக சுகாதாரத்துறை நீடித்த நிலையான வளர்ச்சியை பெற்றுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் 75 இடங்களில் தாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள விபத்து காய சிகிச்சை மையங்களின் மூலம் சாலை விபத்துகளில் இறப்பவர்களின் சதவீதம் 8.6 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாக குறைந்து உள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன், தலா ரூ.20 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் 9 இடங்களில் தாய்மார்களுக்கான ஒப்புயர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது பிரசவ காலங்களில் தாய் சேய் இறப்பு விகிதம் மிகவும் குறையும்.

இந்த பிரசவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதுடன், தமிழகத்தில் முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களுக்கு பிறகு மூன்றாம் நிலை நகரங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் 10 லட்சம் பிரசவங்களில் 7 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. இதன்மூலம் 70 சதவீதம் பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடைபெறுகின்றன. விரைவில் தமிழக முதல்-அமைச்சர் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதன்மூலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும்.

தமிழகத்தில் தற்கொலை முயற்சியை தவிர்க்கும் வகையில் மனநல திட்டத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எலி பேஸ்டினால்(விஷம்) ஏற்படும் மனித உயிர் இழப்பை தடுக்கும் வகையில் எலி பேஸ்டை தடை செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் உரிய கருத்துரு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை நகராட்சி போஸ்நகர் அர்பன் கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரத்தை வழங்கி பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 46 ஆயிரத்து 66 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரம் வழங்கப்பட உள்ளது, என்றார்.

Next Story