கரூர் மாவட்டத்தில் 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்


கரூர் மாவட்டத்தில் 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Jan 2019 11:00 PM GMT (Updated: 6 Jan 2019 8:32 PM GMT)

கரூர் மாவட்டத்தில் உள்ள 3 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் புதூர், கொங்குநகர்-வெங்கமேடு, பொன்நகர்-ஆச்சிமங்கலம், ராயனூர்-வீரராக்கியம் பிரிவு ஆகிய நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பத்தினர் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வந்தார். அவரது வழியில் செயல்படும் தமிழக அரசானது, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கவும் உத்தரவிட்டு இருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள 584 நியாய விலைக்கடைகளிலும் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் உள்ள 2 லட்சத்து 99 ஆயிரத்து 440 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

ஒரு குடும்ப அட்டைதாரரின் குடும்பத்திற்கு தலா ரூ.1000 வீதம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 440 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.29 கோடியே 94 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான தொகையும், ரூ.3 கோடியே 78 லட்சத்து 79 ஆயிரத்து 160 மதிப்பிலான பொங்கல் பரிசுத்தொகுப்பு என மொத்தம் ரூ.33 கோடியே 73 லட்சத்து 19 ஆயிரத்து 160 மதிப்பிலான பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொங்கல் பரிசுத்தொகுப்புகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பாபு, மாவட்ட வழங்கல் அதிகாரி மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story