திருவெறும்பூர் அருகே மாமியாரை வெட்டி விட்டு மருமகள் தற்கொலை


திருவெறும்பூர் அருகே மாமியாரை வெட்டி விட்டு மருமகள் தற்கொலை
x
தினத்தந்தி 6 Jan 2019 10:15 PM GMT (Updated: 6 Jan 2019 9:12 PM GMT)

திருவெறும்பூர் அருகே மாமியாரை வெட்டி விட்டு மருமகள் தற்கொலை செய்து கொண்டார்.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சின்னபொண்ணு (வயது 60). இவர்களது மருமகள் ஈஸ்வரி(45). இருவரது கணவர்களும் ஏற்கனவே இறந்து விட்டனர். ஈஸ்வரிக்கு குழந்தை இல்லாததால் மாமியார் சின்னபொண்ணுடன் ஒன்றாக வசித்து வந்தார். இருவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து சின்னபொண்ணு கழுத்தில் வெட்டினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சின்னுபொண்ணுவை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னபொண்ணு உயிர் பிழைக்க மாட்டார், நம்மை போலீசார் பிடித்து சென்று விடுவார்கள் என்ற பயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி, கிருஷ்ணசமுத்திரம் வயல்காட்டில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஈஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரை வெட்டி விட்டு மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story