மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் அன்னா ஹசாரே அறிவிப்பு


மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் அன்னா ஹசாரே அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Jan 2019 10:45 PM GMT (Updated: 7 Jan 2019 10:45 PM GMT)

மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த வலியுறுத்தி அன்னா ஹசாரே போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

மும்பை,

காந்தியவாதியும், ஊழல் எதிர்ப்பாளருமான அன்னா ஹசாரே மேற்கொண்ட கடுமையான போராட்டத்திற்கு பிறகு, கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டம் மத்தியிலும், பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்படவில்லை. அன்னா ஹசாரே இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

30-ந் தேதி முதல்

இந்த சட்ட விதிகளின் படி மாநிலத்தில் லோக் ஆயுக்தா ஒரு ஆண்டுக்குள் அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் பல மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவரவில்லை. எனவே இந்த சட்டத்தை மாநிலங்களில் நிறைவேற்ற வலியுறுத்தி எனது சொந்த கிராமமான மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தியில் வருகிற 30-ந் தேதி முதல் போராட்டம் நடத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story