குடியாத்தம் அருகே 20 காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் - வாழை, பப்பாளி தோட்டங்களை நாசம் செய்தன


குடியாத்தம் அருகே 20 காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் - வாழை, பப்பாளி தோட்டங்களை நாசம் செய்தன
x
தினத்தந்தி 7 Jan 2019 11:19 PM GMT (Updated: 7 Jan 2019 11:19 PM GMT)

குடியாத்தம் அருகே 20 காட்டு யானைகள் வாழை, பப்பாளி தோட்டங்களை நாசப்படுத்தி மீண்டும் அட்டகாசம் செய்து வருகின்றன.

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் இப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. அங்கிருந்தும் யானைகள் தமிழக எல்லைக்குள் வந்து கிராமப்புற பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்துகிறது.

கடந்த 2 மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தினமும் வாழை, மா, பப்பாளி, தக்காளி மற்றும் நெற்பயிர்களை நாசம் செய்து வருகிறது. வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர். இருப்பினும் யானைகள் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் நேற்றுமுன்தினம் இரவு தனகொண்டபல்லி பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்தில் புகுந்த 20 யானைகள் கொண்ட கூட்டம் 300-க்கும் மேற்பட்ட வாழைமரங்களையும், முனிராஜ் என்பவரது நிலத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்களையும், மாதவன் என்பவரது மாந்தோப்பினையும் நாசம் செய்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், வருவாய்த்துறையினரும் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story