பூதப்பாண்டி பேரூராட்சியில் முறைகேடு புகார்: செயல் அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம் உதவி இயக்குனர் நடவடிக்கை


பூதப்பாண்டி பேரூராட்சியில் முறைகேடு புகார்: செயல் அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம் உதவி இயக்குனர் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2019 10:15 PM GMT (Updated: 8 Jan 2019 9:13 PM GMT)

பூதப்பாண்டி பேரூராட்சியில் முறைகேடு புகார் தொடர்பாக செயல் அலுவலர், உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பூதப்பாண்டி,

குமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர் மணி (வயது 58), மாற்றுத்திறனாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மணி நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதே அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றியவர் அகமது மீரா உம்மாள், மாற்றுத்திறனாளி. இவர் நாகர்கோவிலை அடுத்த பட்டகசாலியன்விளை பகுதியில் வசிக்கிறார்.

பொதுமக்கள் தங்களது நிலத்தில் புதிதாக வீடு கட்டுவதற்கான வரைபடத்தை அனுமதி வாங்க பேரூராட்சி அலுவலகத்துக்கு வருவது வழக்கம். அவ்வாறு வருபவர்கள் தாங்கள் கட்ட இருக்கும் வீட்டின் மதிப்பிற்கு ஏற்ப கட்டணத்தை வரைவோலையாக செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கமாக ஒவ்வொரு பேரூராட்சிகளிலும் தணிக்கை அலுவலர் கணக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் 2017-18-ம் நிதியாண்டுக்கான கணக்கை தணிக்கை செய்வதற்காக அதிகாரி வேல்முருகன் பூதப்பாண்டி பேரூராட்சிக்கு சென்றார்.

அங்கு தணிக்கை செய்த போது, பொதுமக்களின் கட்டிட வரைபடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான கட்டண வரைவோலையை அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடு செய்திருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து தணிக்கை அதிகாரி வேல்முருகன், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

இதனையடுத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் மற்றும் கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரன், செண்பகவள்ளி ஆகியோர் பூதப்பாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் செயல் அலுவலர் மணி மற்றும் இளநிலை உதவியாளர் அகமது மீரா உம்மாள் ஆகிய இருவரும் முறைகேடு செய்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு செயல் அலுவலர் மணி மற்றும் இளநிலை உதவியாளர் அகமது மீரா உம்மாள் ஆகிய 2 பேரையும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், அழகப்பபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் அம்புரோஸ் கூடுதலாக பூதப்பாண்டி செயல் அலுவலராகவும் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவித்தார்.

Next Story