முழு அடைப்பு போராட்டம்; புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, பல இடங்களில் மறியல்- 1000 பேர் கைது


முழு அடைப்பு போராட்டம்; புதுச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, பல இடங்களில் மறியல்- 1000 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2019 12:00 AM GMT (Updated: 8 Jan 2019 11:32 PM GMT)

தொழிற்சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுவையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங் களில் மறியலில் ஈடுபட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி, ஜன.9-

மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

புதுவையிலும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி நகரப்பகுதியில் உள்ள நேரு வீதி, மிஷன் வீதி, காந்திவீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, 100 அடி ரோடு, மறைமலையடிகள் சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளும், தொழிற்பேட்டைகளும் செயல்படவில்லை.

தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் வந்து இருந்தனர்.

புதுவையில் பெரும்பாலும் தனியார் பஸ்களே பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் நேற்று அவை இயக்கப்படவில்லை. அரசு பஸ்களும் இயங்கவில்லை. டெம்போக்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. சில தமிழக அரசு பஸ்கள் மட்டும் வந்து சென்றன.

அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் அரசு ஊழியர்கள், வெளியூர்களில் வேலைக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த முழுஅடைப்பு போராட்டம் காரணமாக புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

புதுவையில் முழு அடைப்பு போராட்டத்தின்போது அண்ணா சிலை அருகே தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சாலை மறியல் நடந்தது. தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மூர்த்தி, அனிபால்கென்னடி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் அண்ணா அடைக்கலம், இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்களை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர்.

ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் இந்திராகாந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். துணைத்தலைவர் சொக்கலிங்கம், பொதுச்செயலாளர்கள் நரசிங்கம், ஞானசேகர், தமிழ்ச்செல்வன், சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, குமார், சேகர், தீனதயாளன், பன்னீர், நிர்வாகிகள் கர்ணன், வெற்றிவேல், நாகலிங்கம், சரவணன், ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சியினர் புதிய பஸ்நிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் சோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அவர்களை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ராஜீவ்காந்தி சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், ஏ.ஐ. டி.யு.சி. நிர்வாகிகள் அபிசேகம், சேதுசெல்வம், துரைசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்களை கோரிமேடு போலீசார் கைது செய்தனர்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ராஜா தியேட்டர் சந்திப்பில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு. தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சீனுவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் முன்பு ஒரு தொண்டர் திடீரென படுத்து மறியலில் ஈடுபட்டார். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும், சி.ஐ.டி.யு.வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை பெரியகடை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏ.ஐ.யு.டி.யு.சி. சார்பில் புதுவை ரோடியர் மில் ரெயில்வே கேட் அருகே ரெயில் மறியல் போராட்டத்துக்கு கூடினார்கள். அவுராவில் இருந்து புதுச்சேரி வரும் ரெயிலை மறிக்க திட்டமிட்டு அவர்கள் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த முதலியார்பேட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது ஏ.ஐ.யு.டி.யு.சி. செயலாளர் முத்து, நிர்வாகிகள் லெனின்துரை, சுதாகர், ஹரிஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

முழுஅடைப்பு போராட்டத்தின்போது காரைக்கால், வில்லியனூர், புதுவை நகர் பகுதி உள்பட பல இடங்களில் மறியலில் ஈடுபட்டதாக மாநிலம் முழுவதும் சுமார் 1000 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் கோரிமேடு போலீஸ் சமுதாய நலக்கூடம், கரிக்குடோன் ஆகிய பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் உயர் போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் ரோந்து சுற்றியபடி இருந்தனர். முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்த முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. மாலை 6 மணிக்கு மேல் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டன. பஸ்களும் இயக்கப்பட்டன. இன்றும் (புதன்கிழமை) 2-வது நாளாக நாடு தழுவிய வேலைநிறுத்தம் தொடருகிறது.

காரைக்காலில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பஸ், ஆட்டோ, வேன், லாரிகள் வழக்கம் போல் ஓடின. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டன. பஸ் நிலையம், கடை வீதி மற்றும் முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காரைக்கால் பஸ் நிலையம் அருகே பாரதியார் சாலையில் முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிககளின் தொழிற்சங்க நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 66 பேரை காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story