வேலைக்கு செல்லும் பெண்கள் அரசு மானியத்துடன் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


வேலைக்கு செல்லும் பெண்கள் அரசு மானியத்துடன் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:00 PM GMT (Updated: 9 Jan 2019 6:07 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


நாமக்கல் மாவட்டத்தில் 2018-2019-ம் நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டர் அரசு மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பயனாளிகள் நாமக்கல் மாவட்டத்தினை பிறப்பிடமாக கொண்டு தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராகவும், அதற்கான ஓட்டுனர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வாகனம் பெறுவதற்கான மொத்த தொகையில் அரசு மானியம் ரூ.25 ஆயிரம் போக மீதி தொகையினை செலுத்த விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியுடையோர் மீண்டும் விண்ணப்பிக்க தேவை இல்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு மற்றும் பதிவு அஞ்சல் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story