பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி திடீர் நிறுத்தம் 3 இடங்களில் மறியல்-போக்குவரத்து பாதிப்பு


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி திடீர் நிறுத்தம் 3 இடங்களில் மறியல்-போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jan 2019 10:45 PM GMT (Updated: 9 Jan 2019 9:14 PM GMT)

தோகைமலை பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டதால் 3 இடங்களில் மறியல் நடந்தது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை,

பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி கரூர் மாவட்டம், தோகைமலை பகுதியில் உள்ள 20 ஊராட்சிகளிலும், கடந்த 2 நாட்களாக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தலா ரூ.ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

நேற்றும் வழக்கம்போல் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கு கோர்ட்டு தடை விதித்த தகவல் பரவியது. இதனால் தோகைமலை பகுதியில் திடீரென பொங்கல் பரிசு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவேண்டும் என கூறி, தோகைமலையில் உள்ள பாளையம்-திருச்சி மெயின் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை தாசில்தார் சுரேஷ்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நீதிமன்ற உத்தரவால் தற்காலிகமாக பொங்கல் பரிசு வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வந்தவுடன் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கொசூர் மற்றும் நாகனூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். தோகைமலை பகுதியில் 3 இடங்களில் மறியல் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story