மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்


மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:15 PM GMT (Updated: 9 Jan 2019 10:34 PM GMT)

மத்திய அரசு ஊழியர்களும், தொழிற்சங்கத்தினரும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தோடு நேற்று மறயலிலும் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் 403 பெண்கள் உள்பட 906 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல்–டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்களும், பல்வேறு தொழிற்சங்கத்தினரும் நேற்று முன்தினமும், நேற்றும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களில் 1070 பேரும், வங்கி ஊழியர்கள் 330 பேரும், மின்வாரிய ஊழியர்கள் 540 பேரும், ஆசிரியர்கள் 40 பேரும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 207 பேரும், தபால் ஊழியர்கள் 430 பேரும், உள்ளாட்சிகள் நிறுவனத்தில் பணியாற்றும் 66 பேரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் நேற்று மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த காதர்மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், தொ.மு.ச. நிர்வாகி பால்பாண்டியன் தலைமையில் பழைய பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். வத்திராயிருப்பில் முன்னாள் எம்.எல்.ஏ.ராமசாமி தலைமையில் நடைபெற்ற மறியலின் போது 35 பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேத்தூரில் முன்னாள் எம்.பி,லிங்கம் தலைமையில் 71 பேரும், பரளச்சியில் 31 பெண்கள் உள்பட 45 பேரும், கீழராஜகுலராமனில் 26 பெண்கள் உள்பட 76 பேரும், திருச்சுழியில் 21 பெண்கள் உள்பட 28 பேரும், நரிக்குடியில் 60 பெண்கள் உள்பட 97 பேரும், ஆலங்குளத்தில் 47 பேரும், சிவகாசியில் மாவட்ட ஏ.ஐ.டி.யூ. செயலாளர் சமுத்திரம் தலைமையில் 9 பேரும் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் மாவட்டம் முழுவதும் 403 பெண்கள் உள்பட 906 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தூரில் மதுரை நிறுத்தம் பகுதியில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர் சங்க மாநில செயலாளர் டெய்சி தலைமைதாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாரதா முன்னிலை வகிதார். இதில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் விஜயகுமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத்தலைவர் பழனிகுமார், மாதர்சங்க மாவட்ட துணைத்தலைவர் லெட்சுமி, ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டையில் பந்தல்குடி ரோட்டில் மறியலில் தாமஸ் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. காத்தமுத்து, பூங்கோதை, செந்தில்குமார், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 84 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

ராஜபாளையத்தில் காந்தி சிலை ரவுண்டானாவில் ஊர்வலம் தொடங்கி ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட அமைப்பு செயலாளர் ரவி, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் கணேசன், ஐ.என்.டி.யூ.சி. கணபதியப்பன், திருவேட்டைபோத்தி, முகமது இலியாஸ், கண்ணன் ஆகியோர் தலைமையில் மறியல் நடைபெற்றது. விஜயன், கோவிந்தன், சித்திரைக்கனி, சுப்பிரமணி, ஜெயபாரத், சித்திக் ஹக்கீம், செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story