வாணரப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வாணரப்பேட்டையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி வாணரப்பேட்டை உடையார்தோட்டம் ஏழை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 43). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு ஜாஸ்மின் (22) என்ற மகளும், டேனியல்(14) என்ற மகனும் உள்ளனர். ஜாஸ்மின் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவருக்கும் வடலூர் பகுதியை சேர்ந்த ஹென்றி என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் 9–ந் தேதி திருமண நிச்சயம் நடந்தது. ஆனால் திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஜாஸ்மின் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் நான் மேலும் படிக்க வேண்டும் என்று தனது பெற்றோரிடம் கூறிவந்தார். ஆனால் அவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் திருமண வேலையை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 31–ந் தேதி ஜாஸ்மினும், அவரது தம்பியும் வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது ஜாஸ்மின் வீட்டில் இருந்த அறையில் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி செய்தார். இதனை பார்த்த டேனியல் கதவை தட்டினார். கதவு திறக்காததால் அவர் கூச்சலிட்டார். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து கதவை உடைத்து ஜாஸ்மினை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஜாஸ்மின் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர் ராஜன், ஏட்டு செஞ்சிவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.