செய்தி மற்றும் விளம்பரத்துறையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; இணையதளத்தை இயங்க செய்ய அறிவுறுத்தல்


செய்தி மற்றும் விளம்பரத்துறையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; இணையதளத்தை இயங்க செய்ய அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 9 Jan 2019 11:15 PM GMT (Updated: 9 Jan 2019 11:13 PM GMT)

செய்தி மற்றும் விளம்பரத்துறையில் ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி துறையின் இணையதளத்தை இயங்க செய்ய அறிவுறுத்தினார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி நாள்தோறும் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி நேற்று அவர் புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது துறையின் செயல்பாடுகள் குறித்து இயக்குனர் வினயகுமார் விளக்கம் அளித்தார்.

துறையின் இணையதளம் இயங்காததை சுட்டிக்காட்டிய கவர்னர் கிரண்பெடி அதை இயங்க செய்யுமாறும், மாற்று திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் அதனை செயல்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். அரசு துறைகளின் செயல்பாடுகள், சாதனைகள் குறித்து இதழ் வெளியிடுமாறும் ஆலோசனை வழங்கினார்.

கோரிமேட்டில் உள்ள விருந்தினர் மாளிகையை முறையாக பராமரிக்க அறிவுறுத்திய கவர்னர், பராமரிப்பு பணிகளை அவுட்சோர்சிங் விடுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் கவர்னர் கிரண்பெடி லம்பார்ட் சரவணன் நகரில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடு வீடுகளையும் பார்வையிட்டார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் அவை உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படாததை கண்ட கவர்னர் கொள்கை முடிவு எடுத்து அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தினார்.


Next Story