டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேச்சு


டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 3:05 PM GMT)

டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் பெரும்பாலான சாலை விபத்துக்களை தவிர்க்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு சாலை பாதுகாப்பு பற்றிய 2 நாள் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை முகாம் வளாகத்தில் நேற்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பொதுவாக சாலை விபத்துக்கள் 3 காரணங்களால் ஏற்படுகிறது. அதில் ஒன்று மோசமான சாலைகள்.

இரண்டாவது டிரைவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவு ஆகியவை.

 3–வது வாகனங்களை சரிவர பராமரிக்காத காரணங்களாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் பெரும்பாலான விபத்துக்களை தவிர்க்கலாம்.

மார்த்தாண்டம் முதல் நாகர்கோவில் வரையிலான சாலையில் வில்லுக்குறி உள்ளிட்ட சில இடங்களில் விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. இந்த விபத்துகளுக்கு டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இல்லாததே காரணம். இந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வந்தாலும், குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே விபத்துக்கு ஆளாகின்றன. அதற்கு டிரைவர்களின் கவனக்குறைவும் ஒரு காரணம்.

அதேபோல் வாகனங்களை ஓட்டி செல்வோர் சுவர்கள், மின்கம்பங்கள் போன்றவற்றில் மோதியும், ஆறு, கால்வாய், குளம், பள்ளம் போன்றவற்றில் பாய்ந்தும் தங்களுக்கு தாங்களே விபத்தை ஏற்படுத்தி கொள்வதும் உண்டு. இம்மாதிரியான விபத்துகளின்போது வாகன ஓட்டிகள் 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு குறைவாகச் சென்றால் பெரும்பாலும் உயிரிழப்பு ஏற்படாது. 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு அதிகமாக சென்றால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே குறைந்த வேகத்திலேயே வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டும்.

உயிர்பாதுகாப்பு வாகன ஓட்டிகளின் கையில் உள்ளது. எனவே பாதுகாப்போடு பயணம் செய்ய வேண்டும். மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். கார் ஓட்டி செல்பவர்கள் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது விபத்து ஏற்பட்டாலும் உயிர் இழப்பு ஏற்படாது. ஹெல்மெட் அணிவதன் மூலம் உங்களை காப்பதோடு மட்டுமின்றி உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றலாம்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.

முன்னதாக அவர் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியும், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் (நாகர்கோவில்), பயிற்சி உதவி சூப்பிரண்டு கார்த்திகேயன் (தக்கலை), வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்ஜாண் ஒய்ஸ்லின்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், டாக்டர் மரியசுபின், பேராசிரியர் வேணுகுமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) 2–வது நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

Next Story