திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.3.35 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.3.35 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 5:09 PM GMT)

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

எலச்சிபாளையம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் அணிமூர், சிக்கநாயக்கன்பாளையம், அ.இறையமங்கலம், எஸ்.இறையமங்கலம், மொளசி, பிரிதி ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மு.ஆசியா மரியம் ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் அணிமூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8.21 லட்சம் மதிப்பீட்டில் அணிமூர் நாடார் வீதி தார்சாலை மேம்படுத்தப்பட்டு உள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சிக்கநாயக்கன்பாளையம் ஊராட்சியில் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினையும், அ.இறையமங்கலம் ஊராட்சியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளியம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

பின்னர் எஸ்.இறையமங்கலம் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்று பண்ணை அமைத்து வேம்பு, புங்கன், கொய்யா, கொன்றை, அரசன், பூவரசு, புளி, அத்தி, சரக்கொன்றை, நெல்லி, தேன் திராட்சை, சிலவாகை, ஆனக்குண்டுமணி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டார். இதுவரை இந்த மரக்கன்று பண்ணையில் 50,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்து அதில் 8,000 மரக்கன்றுகள் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் சாலையோரங்களில் நடப்பட்டுள்ளதையும் கலெக்டர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து மொளசி ஊராட்சியில் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் மொளசி அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், பிரிதி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினையும் என மொத்தம் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டேவிட் அமல்ராஜ், பரமசிவன் உள்பட பணி மேற்பார்வையாளர்கள் உடன் சென்றனர்.

Next Story