பழங்குடியின பெண்கள் சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும் கலெக்டர் பேச்சு


பழங்குடியின பெண்கள் சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:30 PM GMT (Updated: 10 Jan 2019 5:38 PM GMT)

பழங்குடியின பெண்கள் சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று மனுநீதி நாள் முகாமில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

ஊட்டி,


நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட சேம்புக்கரை கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், முதிர்கன்னி உதவித்தொகை 9 பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான ஆணை, 31 பேருக்கு சாதி சான்றிதழ்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 16 பேருக்கு நல வாரிய அட்டைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி, அவை பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது. தொலைதூரத்தில் உள்ள வளர்ச்சி குன்றிய கிராமங்களை கண்டறிந்து, நடைபாதை, மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகள் அனைத்தும் செய்து தரப்படுகிறது. ஒவ்வொருவரது வீட்டிலும் கட்டாயமாக கழிப்பறை கட்ட வேண்டும். அவ்வாறு கழிப்பறை கட்ட முடியாத இடங்களில், பொது கழிப்பிடத்தை கட்டி அதனை பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் அதிக வேலைவாய்ப்பு உள்ளது.

எனவே பொதுமக்களே பணிகளை எடுத்து உங்கள் ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளலாம். போஷான் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், எடை குறைவான குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தை திருமணத்தை முற்றிலும் தவிர்த்து, அவர்களை பள்ளிக்கு அனுப்பி கல்வி கற்க செய்ய வேண்டும். மேலும் பழங்குடியின பெண்கள் அனைவரும் குழுக்களாக சேர்ந்து கடனுதவி பெற்று, சுயதொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். முகாமில் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். 

Next Story