வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரிப்பு நடிகர் அஜித் படம் பார்க்க பணம் தராததால் மகன் வெறிச்செயல்


வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரிப்பு நடிகர் அஜித் படம் பார்க்க பணம் தராததால் மகன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 10 Jan 2019 11:30 PM GMT (Updated: 10 Jan 2019 5:55 PM GMT)

அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால் ஆத்திரமடைந்து, தந்தையை மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்த மகனை போலீசார் கைதுசெய்தனர்.

காட்பாடி, 

நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு தியேட்டர்களில் வெளியானது. படம் பார்ப்பதற்கு அஜித் ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று அதிகாலை முதலே சினிமா தியேட்டர்களில் குவிந்தனர். அவர்கள் படம் பார்ப்பதற்காக முண்டியடித்து டிக்கெட் வாங்கிச்சென்றனர்.

வேலூரை அடுத்த காட்பாடி கழிஞ்சூர் புதுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). பீடி சுற்றும் தொழிலாளி. இவரது மகன் அஜித்குமார் (20). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு நடிகர் அஜித் நடித்து வெளியாகி உள்ள விஸ்வாசம் படம் பார்க்க டிக்கெட் எடுப்பதற்காக தந்தை பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என பாண்டியன் கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அஜித்குமார் தூங்க சென்றுவிட்டார்.

நேற்று அதிகாலை தூங்கி எழுந்த அஜித்குமார், படம் பார்ப்பதற்கு பணம் தராததால் தந்தை மீது ஆத்திரம் அடைந்தார். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாண்டியன் மீது தந்தை என்றும் பாராமல் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பாண்டியன் உடல்முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் பாண்டியன் வலிதாங்கமுடியாமல் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.

இதில் பாண்டியனின் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காட்பாடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story