கோவையில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான தியேட்டரில் போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு; ரசிகர்கள் மீது தடியடி


கோவையில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான தியேட்டரில் போலீஸ் ஜீப் கண்ணாடி உடைப்பு; ரசிகர்கள் மீது தடியடி
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 6:01 PM GMT)

ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜீத் நடித்த விஸ்வாசம் படங்கள் நேற்று வெளியிடப்பட்ட கோவை தியேட்டர் முன்பு ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

கோவை,

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் 67 தியேட்டர்களிலும், அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் படம் 73 தியேட்டர்களிலும் நேற்று காலை வெளியானது.

இதையொட்டி தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் ரஜினிகாந்த், அஜித் குமாரின் கட்அவுட்டுகள், பேனர்கள் வைத்திருந்தனர். ரசிகர்கள் கட் அவுட்டுகளுக்கு மாலை அணிவித்தும், பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை பூமார்க்கெட் பகுதியில் ஒரே காம்பிளக்சில் உள்ள அர்ச்சனா, தர்ஷனா தியேட்டர்களில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியிடப்பட்டது. இந்த தியேட்டர்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ரசிகர்கள் கூட்டம் திரண்டநிலையில் காலை 5 மணியளவில் விஸ்வாசம் படம் திரையிடப்பட்டது. ஆனால் பேட்ட படம் காலை 9 மணிக்கு திரையிடப்படும் என்று கூறப்பட்டதால் ரஜினி ரசிகர்கள் ஆவேசம் அடைந்து சத்தம்போட்டனர். தியேட்டரில் இரு நடிகர்களின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ரஜினியின் பேனர் கிழிக்கப்பட்டது.

தியேட்டர் கதவை ஒட்டி நிறுத்தப்பட்டு இருந்த ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப்பின் மீது ரசிகர்கள் விழுந்தனர். அப்போது ஜீப்பின் பின்பக்க கண்ணாடியை சிலர் கையால் குத்தி உடைத்தனர்.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினார்கள். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 2 படங்களுக்கும் டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தியேட்டர் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதே போல் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்ட தியேட்டர் களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. 

Next Story