எலக்ட்ரானிக் கடையில் மின்சாரம் தாக்கி பெண் ஊழியர் சாவு


எலக்ட்ரானிக் கடையில் மின்சாரம் தாக்கி பெண் ஊழியர் சாவு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:00 PM GMT (Updated: 10 Jan 2019 6:47 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே எலக்ட்ரானிக் கடையில் மின்சாரம் தாக்கி பெண் ஊழியர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஓட்டப்பிடாரம், 

நாமக்கல் டவுன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி பானுமதி. இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கண்மணி (வயது 21). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள தனது சித்தி ரம்யா வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் இரவு கடைகளில் உள்ள மின் விளக்குகளை அவர் அணைத்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாம்.

நேற்று முன்தினம் இரவு கடைகளில் உள்ள மின் விளக்குகளை அவர் அணைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story